Thursday 18 February 2016

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

அழகே உன்னை ஆராதிக்கிறேன் .

கவிதைப்போல உள்ள இந்த டைட்டிலே பல முறை இந்தப்படத்தைப்பார்க்கும் ஆவலைத்தூண்டியுள்ளன. என் ஸ்கூல் பருவங்களில் மாலை 3.30 , 4.30 மணியளவில் வீடு வரும்போது அம்மா கேட்கும் ரேடியோ நிகழ்ச்சிகளில் இந்தப்பாடல்கள் இடம்பெறும். இளையராஜாவின் இசையமைப்பில் உருவான மேஜிக்

 என்பதெல்லாம் அப்போது அறியாதப்பருவம். ஆனால் பாடல்கள் இப்போது கேட்டாலும் , அன்றைய மாலைப்பொழுதுகளை விழுங்கிய நினைவுகள் அலையடிக்கும் மனதில்.

சரி..சரீ...விஷயத்திற்கு வந்துவிடுகிறேன்.

நீண்ட நாள் ஆசையாக சமீபத்தில் நிறைவேறியது இந்தப்படம் பார்க்கும் ஆவல்.

காதலிக்க நேரமில்லை போலீஸ்காரன் மகள் தந்த ஸ்ரீதர் படம் என்பதும் ஆவலை அதிகப்படுத்த காரணம் ஆனது !

ஆரம்பமே அழகான இளைஞி நம் லதா , வாணி என்றக் கதாப்பாத்திரத்தில் ! வாணியின் காதலனாக வேணு(ஜெய் கணேஷ்) . இவர்கள் பைக்கில் உல்லாசப் பறவைகளாக பறக்கப்பர்சை நழுவவிடுகிறார் ஹீரோயின் அது செகண்ட் (??!) (இல்ல அவர்தான் முதலா என்று டைரக்டர்(ஆத்மா) டம் கேட்கணும்.)
ஹீரோ வாசு என்கிற விஜயக்குமார் கையில் கிடைக்க , அதிலிருக்கும் வாணி போட்டோவைப் பார்த்து உருகுகிறார். 

ஒரு பொக்கே ஷாப்பில் அவரைப்பார்த்ததும் காதல் கொண்டு அழகே உன்னை ஆராதிக்கிறேன். என்று தன் பெயர் இல்லாமல் எழுதி எழுதி லதாவிற்கு அனுப்பி வைக்கிறார். 

ஆமாங்க , நாம் அந்த நிலையில் இருந்தாலும் அதையே செய்திருப்போம் அத்தனை அழகு லதா , இதை விடக்கூடாதே! 

 கட்டியிருக்கும் சேலைகளும் செம அழகு.

இப்போதேக் கதை புரிந்திருக்குமே , ஹ்ம்ம்ம் அதே முக்கோணக் காதல் கதை !
வாணியின் அண்ணா வி.எஸ்.கோபாலகிருஷ்ணன் ,அண்ணி(கன்னட ஆர்டிஸ்ட் போலைருக்கறார்) ஒரேப் பெண்(சுட்டியாம் , இயக்குநரின் அதிப்புத்திசாலித்தனத்தை சுமந்துசெல்கிறார் இவர்) சுபாஷினி அறிமுகம்.. இவர் எடுத்து விடும் ஏ ஜோக்குகள் பாப்பா என்றுக்கூறியதற்காக மெக்கானிக் ஆக வரும் நாகேஷ் மூலம் நமக்கும் வந்து சேர்கின்றன.

தங்கையின் மேல் பாசமும் கூடவே நம்பிக்கையும் சேர்த்து க்கொண்ட அடிக்கடி ரிப்பேர் ஆகும் காருக்கு சொந்தக்கார அண்ணன் , லதா ஜெய் கணேஷை அறிமுகம் செய்து வைக்க டிசெண்டாக நகர்ந்துப்போகிறார்.

அண்ணனிடம் இதைப்பற்றி ப்பேச வரும்போது , அண்ணன் உன் வாழ்க்கை உன் மேல் நம்பிக்கை உள்ளது , வேணுவைப்பார்க்கலாம் எனவும் , அவர்கள் வீட்டின் மாடிப்போர்ஷனுக்கே ஹோட்டல் சாணக்யாவில் வேலைப்பார்க்கும் விஜயக்குமாரும் வந்து சேர அவரின் ஒருதலைக்காதலும் செழித்து வளர்கிறது.

வேணுவின் காமக்கண்ணும் பேச்சும் அறியாத (அப்பாவி!?) புத்திசாலிப் பெண்ணுமான லதா அவர் தரும் மதுக்கலந்த கூல்டிரிங்க் குடிக்க நானே நானா (வாணிஜெயராமின் குரலில் நாம் மயங்கும் இந்தப்பாடலே படம் பார்க்கவைத்தக்காரணி !) என்றுப்பாடி மயங்க , காத்திருந்த வேணு , அனுபவித்துக் கம்பி நீட்டுகிறார். அதே இரவில் வெளியூர் சென்றிருந்த அண்ணா அண்ணி சாலைவிபத்தில் இறக்க , காதலனும் காணாமல் போக , அண்ணன் பெண் சுபாஷிணிக்காக வாழவேண்டியக்கட்டாயத்தில் தள்ளப்படும் வாணி(லதா)க்கு ஆதரவுக்கரம் நீட்டுகிறார் அதான் ஆல்ரெடி லவ்விக்கொண்டிருக்கும் வாசு.

மன நிலை உடல்நிலை யைப் பாதிக்கிறதாம் வாணிக்கு , மாற்றுதலுக்காக வேற ஊர்ப்போய் தங்கசொல்றார் டாக்டர். 

அதெப்படிங்க நமக்கு மட்டும் ஒரு டாக்டரும் இப்படி ஒரு அட்வைஸ் பீஸ் கொடுத்தாலும் சொல்ல மாட்டேங்கறாங்க? !! 

. என்னவோ போங்க. !! மீதிக்கதைக்கு வரேன்.

இடம் மாறுதல் வேண்டும் என்பதற்காக கோவாவில் புதிதாக திறக்கப்பட்ட தங்களது ஹோட்டலுக்கு மாற்றலாகும் வாசுவோடு வாணி , சுபாஷினி யும் ட்ராவல் செய்கின்றனர்.

இதற்கிடையில் இன்னொரு லவ் ட்ராக் ..சுபாஷினி & பிரசாத்(விமல்) புதுமுகம் . பணக்கார பையன் சொத்தை உதறி சுபாஷினி மேல் லவ்வாகி , செருப்புக்கடை பையன் , பெட்ரோல் போடும் பையன் என வேலை ப் பார்த்து சிம்பதி சேர்த்து , அத்தை லதாவின் பெர்மிஷனையும் சேர்த்துப்பெற்றுக்காதலிக்கிறார்.

கோவாவில் மீண்டும் தென்படும் ஜெய்கணேஷ் பார்வை சுபாஷினி மேல் பட , லதாவின் முன் நடித்து , அவரைத்தன்னுடன் அழைத்துசெல்கிறார்
இந்தக்கேப்பில் மீண்டும் பொக்கே தந்து தன் காதலை வெளிப்படுத்துகிறார் விஜயக்குமார்(வாசு) இதைப்புரிந்துக்கொள்ளாதவர் மாதிரியும் ஆனால் அவர் செய்யும் எல்லா உதவிகளையும் ஏற்ற ப்படி அவர் நிழலில் ஹீரோயின். லேசா இடிக்குதுல்ல..!

வேணு எப்படியாவது சுபாஷினியை அடைய விரும்ப அதை தெரிந்துக்கொண்ட வாணி என்ன செய்தார் ? காத்திருக்கும் வாசுவுடன் இணைந்தாரா , சுபாஷினி பிரசாத் திருமணம் நடந்ததா இதான் மீதிக்கதை.

கதை திரைக்கதை, வசனங்கள் எழுதிய ஸ்ரீதர் சார் புதுமையாக எடுக்க முயற்சித்திருக்கிறார். அப்ப்பா வசனங்கள் அப்பவே அப்படியா என வியக்க வைக்கின்றன. முடிந்த அளவு இங்கிலீஷில் பேச வைத்திருக்கிறார் படத்தின் முன் பாதியில் இருந்த இந்த கிரிஸ்ப் வசனங்கள் பிற்பாதியில் நமத்துவழிகின்றன்.கதைகளம் பெங்களூர் என்பதாலோ என்னவோ கன்னடவாடை வீச , லேசாக கமல்ஹாசன் ஜாடையில் இருக்கும் இந்த பிரசாத் , பாடி லேங்குவாஜ் அதிலும் குறிப்பாக ரெண்டுப் பாடல்களில் பார்க்க முடியவில்லை , எப்படி சகித்துக் கொண்டனர் யூனிட் என நினைக்காமலிருக்க முடியவில்லை.
1979 ல் ஆரம்ப இளையராஜா இளமை வழிந்தோட இசை விருந்துப் பரிமாற , வாணி முன்பு பின் புறமாக அணைக்க வரும் காதலனைக் கோபித்துக்கொள்பவர் , தன்னை மதுதந்து சீரழிக்க எப்படி உடன்படுகிறார் ஏன் உடனேயே ரியாக்ட் செய்யவில்லை ? 

பின் வேலை ராஜினாமா, மீண்டும் சேர்தல் என க்ளாரிட்டி இல்லாத பாத்திரப்படைப்பு , நாவல் படித்த உணர்வை படம் நம் மீது அள்ளித்தெளித்தாலும் கண்கள் மட்டும் அழகியான லதாவின் மீதே லயிக்கின்றன.

முடிந்தும் அழகே உன்னை ஆராதிக்கிறேன் என்று முணுமுணுக்கிறது தந்னிச்சையாய் வாய். .

பார்த்தாலும் பார்க்கலந்னாலும் திரும்ப ஒருமுறை பார்க்கலாம் ..

No comments:

Post a Comment